சிறையில் கம்பி எண்ணும் சிவசங்கர் பாபா...10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை: கடவுளாக சித்தரித்துக்கொண்டு ஏமாற்றிய சாமியார்கள் பலர் சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர். அந்த வரிசையில் சிவசங்கர் பாபாவும் தற்போது பாலியல் புகாரில் சிக்கி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சிவசங்கர் பாபா வின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சிபிசிஐடிக்கு கடந்த ஜூன் 14ஆம் தேதி மாற்றப்பட்டது.
இது குறித்து விசாரிக்க அவருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த டேராடூன் விரைந்த சிபிசிஐடி போலீசார் அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பிச் சென்றதை கண்டு பிடித்தனர். அவர் வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
தலைமறைவான அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் டெல்லி காவல்துறையினரின் உதவியுடன் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.
மொட்டை அடித்துக்கொண்டு தனது அடையாளத்தையே மாற்றியிருந்தார் சிவசங்கர் பாபா. டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் நீதிமன்ற அனுமதியுடன் தமிழகம் அழைத்து வரப்பட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐ அலுவலகத்திற்கு நள்ளிரவு 1 மணியளவில் சிவசங்கர் பாபாவை போலீசார் அழைத்து வந்தனர். மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
நேற்று காலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும், சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். போக்சோ நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதி விடுமுறையில் இருக்கக் கூடிய காரணத்தினால், மகளிர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தனக்கு ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு அளித்திருந்தார். நீதிபதியிடம் தழுதழுத்த குரலில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் என்னை சிறைக்கு அனுப்பாதீங்க.என்னை மருத்துவமனையில் சேருங்க என்று சிவசங்கர் பாபா கெஞ்சினார். ஆனால் சில புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் சமர்பித்தனர். அதைப் பார்த்த நீதிபதி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிவசங்கர் பாபாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.
சுசீல்ஹரி பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேரில் அழைத்து சென்று சிவசங்கர் பாபாவை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.