கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தீவிரம்: எஸ்டேட் மேனேஜரின் நண்பர் உட்பட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!
கோடநாடு வழக்கில் மூன்று பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை : நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்து வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோத்தகிரியைச் சேர்ந்த மூன்று பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பர் கர்சன் செல்வம் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக நீலகிரி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த கர்சன் செல்வம் உட்பட 3 பேரும் பிப்ரவரி 7ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
கோவையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு 3 பேரும் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு மர்மம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

கார் டிரைவர் கனகராஜ்
அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்கு உள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

3 பேர்
கடந்த செப்டம்பர் மாதம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 28ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பர் கர்சன் செல்வம், கோத்தகிரியில் கடை நடத்தி வரும் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிபிசிஐடி சம்மன்
இதில் கர்சன் செல்வம் அன்றைய அதிமுக நீலகிரி மாவட்ட அம்மா பேரவையின் துணைச் செயலாளர். கர்சன் செல்வம் உள்ளிட்ட மூன்று பேரும் வரும் பிப்ரவரி கோவையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications