யார் இந்த கிருஷ்ணதாபா? நேபாளம் பயணிக்கும் சிபிசிஐடி.. பரபரப்பாகும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நேபாளம் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாள்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

தனிப்படை விசாரணை
இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல்துறைக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்குத் தொடா்புடைய அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வந்தனா். சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அறிக்கைகள்
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஷகில் அக்தர் நேரடி விசாரணை
இரு நாட்களுக்கு முன் கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு ஆய்வு நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் டிஜிபி ஷகில் அக்தர் எஸ்டேட் உள்ளே பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கணினி பொறியாளராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேபாளம் செல்லும் சிபிசிஐடி
2017ம் ஆண்டில் இரவு பணியில் இருந்த கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் இரவு காவல் பணியில் இருந்தனர். அப்போது கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து ஓம்பகதூரை கொலை செய்து, பொருட்களை கொள்ளையடித்தனர். அப்போது கிருஷ்ணதாபா தப்பிய நிலையில், தற்போது கிருஷ்ணதாபா தன் குடும்பத்துடன் நேபாளில் வசித்து வருகிறார். இவ்வழக்கு குறித்து விசாரிக்க கிருஷ்ணதாபாவை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் விரைவில் நேபாளம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications