பெரிய ஆபத்துங்க.. கரூர் கேஸை சிபிஐ விசாரித்தால் பெரிய சிக்கல்.. உச்ச நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில சுயாட்சியைப் பலவீனப்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதாகவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு காவல்துறையின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவிடம் (எஸ்ஐடி) இருந்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 அன்று உத்தரவிட்டிருந்தது.
கரூர் வழக்கு தவறான முன்னுதாரணம்
இதை எதிர்த்து, "அரசியல் உள்நோக்கமோ அல்லது குற்றச்சாட்டுகளோ ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகளில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆளும் ஒரு கூட்டாட்சி அரசியலில், அரசியல் உள்நோக்கம் அல்லது போட்டியின் குற்றச்சாட்டுகள் சகஜம், அதை சிபிஐக்கு மாற்ற காரணமாக சொல்ல கூடாது" என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
அரசியல் உள்நோக்கங்கள் சிபிஐ தலையீட்டிற்குப் போதுமான அடிப்படையாக அமைந்தால், மத்திய புலனாய்வு அமைப்புகள் மாநில அளவில் பல வழக்குகளில் தலையிட நினைக்கும். இந்த ஒரு தீர்ப்பை வைத்து சிபிஐ அமைப்பை அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். அத்துடன், இந்த இடைக்கால உத்தரவு மாநில சுயாட்சியையும், அரசியலமைப்பு ரீதியான அதிகார சமநிலையையும் வெகுவாகப் பாதிக்கும்.
கரூர் கேஸ் - ஆபத்து
மேலும், கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக உள்ளது. சட்ட ஒழுங்கு என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தவறான முன்னுதாரணமாக மாறும். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மதராஸ் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி), வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஏற்கனவே செயல்பட்டு வந்தது.
ஆனால் இதை மீறி சிபிஐக்கு மாற்றியதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. கரூர் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கு எந்தவொரு நிரூபிக்கக்கூடிய காரணமோ அல்லது ஆதாரமோ இல்லை. ஆனால் அதை மீறி வழக்கை மாற்றி உள்ளனர்.
கரூர் கேஸ் - சிபிஐ
மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுவில், தமிழக ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க அக்டோபர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது. இது போன்ற உத்தரவுகள் தவறன வழிகாட்டுதலாக அமையும்.
இது ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரானது. அவர்களுக்கு நேர்மைக்கு எதிரான அவமதிப்பு, ஏனெனில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாரபட்சமானவர்கள் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது ஆபத்தான கருத்து.
இந்த வகைப்பாடு சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாததற்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications