ஜாதி மதம் இல்லை என சான்று வாங்கிய சென்னை சிறுவன்! உயர்நீதிமன்ற உத்தரவால் தாசில்தார் வழங்கினார்!
சென்னை: சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு 2 வாரத்துக்குள் ஜாதி, மதம் இல்லை என சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுவனுக்கு அம்பத்தூர் தாசில்தார் ஜாதி, மதம் இல்லை எனக்கூறி சான்றிதழ் வழங்கி உள்ளார்.
Recommended Video
தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையில் ஜாதி, மதம் அடிப்படையில் பிரிவினையை பார்ப்பது என்பது மிகவும் கொடுமையானது. இதனை நீக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகம், கேரளா உள்பட பல இடங்களில் ஜாதி, மதம் இல்லை என பலர் சான்றிதழ்கள் வாங்கி வருகின்றனர். தங்களின் மகன், மகளுக்கு இத்தகைய சான்றிதழ்கள் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
2 வாரம் டைம்.. ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கேட்டவருக்கு வழங்கனும்: ஹைகோர்ட்
சான்று பெற முயற்சி
அந்த வகையில் சென்னை அம்பத்தூர் தாலுகா பாடி கிராமம் அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் தனது மகன் யுவனுக்கு ஜாதி, மதம் இல்லை என சான்று பெற விரும்பினார். விரைவில் பள்ளியில் சேர்க்க உள்ளதாக இந்த சான்றை விரைவாக பெற அவர் முயற்சியும் செய்தார். அதன்படி மனோஜ் தனது மகன் யுவனுக்கு ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் எனக்கூறி அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதோடு உரிய பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், மகன் யுவன் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
2 வாரத்துக்கு வழங்க உத்தரவு
நீதிபதி அப்தூல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது, ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தார் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதை ஏற்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் 2 வாரத்துக்குள் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சான்று வழங்கல்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மனோஜ் மகன் யுவனுக்கு ஜாதி, மதம் இல்லை எனக்கூறி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் நேற்று வழங்கி உள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே பலர் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி மதம் இல்லை என சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.