தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு கோடிக்கணக்கில் நகை-பணம் கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் நகைக்கடன் கிளை உள்ளது. இந்நிலையில் வங்கிக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்கிவிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி உள்ளது. வழக்கம்போல் வங்கியின் நகைக்கடன் பிரிவில் இன்று ஊழியர்கள் பணி செய்து வந்தனர். வங்கியில் பொதுமக்களும் வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென்று மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தியை காட்டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டினர்.

கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
மேலும் ஊழியர்களை கட்டிப்போட்ட மர்மநபர்கள் வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுபற்றி வங்கி ஊழியர்கள் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை
முதற்கட்ட விசாரணையில் வங்கியில் இருந்து பணம், நகைகள் என கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமரா ஆய்வு
மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை துவங்கி உள்ளனர்.

4 தனிப்படைகள் அமைப்பு
மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இந்த தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் வங்கி முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications