சென்னையில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை இன்னும் 3 மணி நேரத்துக்கு என்ஜாய் பண்ணப்போறீங்களாம்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்க்கிறது கோடை மழை. சட்டென்று மாறிய வானிலையால் குளுமை பரவி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அனல் காற்று வீசி வந்தது. அக்னி நட்சத்திரம் வரும் முன்பாகவே இப்படி வெயில் சுடுகிறதே என்று மக்கள் தவித்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பரவலான மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மதுரை,விருதுநகர், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, காங்கேயம், தர்மபுரி மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவையில் பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை மழை
கோடைகாலத்தில் இடியும் மின்னலுமாய் பெய்யும் மழை மக்களை அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தும் காரணம் வெயிலுக்கு இதமாக பெய்யும் மழையில் பலரும் ஆட்டம் போட்டு கொண்டாடுவார்கள். சென்னையில் வெயிலின் புழுக்கத்தில் தவித்த மக்களுக்கு இதமாக இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மயிலாப்பூரில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடிமழையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளுத்து வாங்கிய மழை
சென்னையின் நகர் பகுதிகளான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொட்டி தீர்த்த மழை
ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை கொட்டித்தீர்த்தது. அங்கு 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே போல திருத்தணி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
3 மணி நேரத்திற்கு மழை
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கொளுத்திய கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்க்கும் மழையை சென்னைவாசிகள் அனுபவிக்க தயாராகி வருகின்றனர்.
18ஆம் தேதி வரை மழை
குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் வரும் 18ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.