சென்னையில் அதிர்ச்சி... கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு... மீண்டும் தொற்று!!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலில் இருந்த கொரோனா வைரஸ் சரியாகாமல் மீண்டும் உயிர் பெற்று இருக்கிறதா அல்லது மறுபடியும் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதற்கான சாட்சியங்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் தொற்று வந்திருக்கும் 10 பேர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் அளித்து இருக்கும் பேட்டியில், ''கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நெகடிவ் என்று வந்த பின்னர், ஏன் நோயாளிகளுக்கு லேசான, தீவிரமான மற்றும் அறிகுறியே இல்லாமல் மீண்டும் தொற்று ஏற்படுகிறது என்பது குறித்து மரபணு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் அறிவியல் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளிடம் வெவ்வேறு மரபணுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.
''மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உடலில் வைரஸ் இருந்து கொண்டே சரியாகாமல் மீண்டும் உயிர் பெற்று இருக்கலாம் அல்லது மறுபடியும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். இரண்டு பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், இருக்கும் மரபணுக்களை ஆய்வு செய்வோம். வெவ்வேறாக இருந்தால் அது மீண்டும் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். ஒரே மாதிரியான மரபணு என்றால், உடலில் இருந்து கொண்டே மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்'' என்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஆர். ஜெயந்தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு தகவல்கள் பெற்று இருக்கும் உலக சுகாதார நிறுவனமும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது.
கொரோனா ...பிளாஸ்மா தெரபி...உயிரிழப்பு குறையவில்லை... ஐசிஎம்ஆர் ஆய்வில் முடிவு!!
இதேபோல் எக்மோரில் இருக்கும் தாய் சேய் மருத்துவமனையின் மருத்துவர்கள் இருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு கொரோனாவுடன், டெங்குவும் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குவுடன் சேர்த்து உடல்வலி இருந்துள்ளது. இது டெங்குவுக்கான தவறான அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால் அவருக்கு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவருக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பி வசந்தா மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ராணி ராஜன் கூறுகையில், ''மீண்டும் தொற்று வந்து இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கிறது. இங்கு 5 பேர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உயரதிகாரி ஒருவருக்குக்கு இதேபோன்று மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், லேசான அறிகுறிதான் உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்'' என்றார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தால், ஏற்கனவே ஏற்பட்டு இருந்த தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு கிடைத்து இருக்கும். மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும்பட்சத்தில் அந்த நோய் எதிர்ப்பு சக்தி எதிர்ப்பாற்றலை அளிக்கும் என்று முன்பு வெளியான ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், இந்த நோய் எதிர்ப்பும் நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் அதே ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.