சென்னை மக்களை குஷியாக்கும் செய்தி.. ‘42 பார்க்’ ஆர்டர் போட்ட மாநகராட்சி! வேலை தொடங்குவதுதான் பாக்கி!
சென்னை: வாகன நெரிசல் புகையிலும், பணி அழுத்தங்களுக்கு மத்தியிலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகள் பெரும்பாலானோருக்கு பூங்காக்கள்தான் ஆசுவாசமளிக்கின்றன.
அந்த வகையில் சென்னைக்கு புதியதாக 42 பூங்காக்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.20 கோடி மதிப்பில் பூங்காக்களுடன் விளையாட்டு திடல்களும் அமைய உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொரி சுண்டலுடன்.. சென்னை மின்சார ரயிலில் ஆயுதபூஜை செலிபிரேட்..ரயில்வே அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவு?
பொழுதுபோக்கு அம்சம்
மற்ற மாவட்டங்களைப் போல நீர்வீழ்ச்சி, ஏரி, குளம், ஆறு, மலை என பொழுதுபோக்கு அம்சங்கள் சென்னையில் கிடையாது. கடற்கரை, பூங்காக்கள் ஆகியவையே சென்னை மக்களின் பிரத்யேக சுற்றுலாத் தலங்கள். ஆண்டுக்கு 365 நாட்களில் 300 நாட்களுக்கும் மேல் பிஸியாக வேலையில் தன்னுடைய வாழ்நாளை கழிக்கும் சென்னைவாசிகளுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் பூங்காக்கள் சென்னையின் சாமானிய மக்களின் 'ஸ்ட்ரஸ் பஸ்டர்'. ஆனால் திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் இந்த பூங்காக்களும் பெரிய அளவில் கிடையாது.
நவீன அம்சம்
எனவே பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக தற்போது 42 புதிய பூங்காக்களை அமைக்க பணி ஆணையை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. அதன்படி, ரூ.20 கோடி மதிப்பில் 42 பூங்காக்களும், 11 விளையாட்டு திடல்களும் சென்னையில் அமைய இருக்கின்றன. இவ்வாறு கட்டப்படும் பூங்காக்களில் நவீன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
வட சென்னை
அதாவது புதிய பூங்காக்களில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் பகுதி, உடற்பயிற்சிக் கருவிகள், பாரம்பரிய மரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இத்துடன் கழிவறையும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக திருவொற்றியூரில் அசோக் அவென்யூ மற்றும் ஹன்சா ஜெம்ஸ் அமைந்துள்ள இடங்களில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் 2 பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
தென் சென்னை
அடுத்ததாக, மாதவரத்தில் மீனாம்பாள் அவென்யூ மற்றும் தணிகாசலம் நகர் ஆகிய பகுதிகளிலும், தண்டையார் பேட்டையில் கைலாசம் தெருவிலும், ராயபுரத்தில் ராமதாஸ் நகரிலும் என 8 பூங்காக்கள் அமைய இருக்கின்றன. திரு.வி.க.நகரில் ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் 3 பூங்காக்கள் அமைய இருக்கிறது. அம்பத்தூரில் உள்ள பாடி குப்பம் மெயின் ரோடு, நக்கீரன் சாலை, கங்கா நகர் ஆகிய இடங்களிலும், வளசரவாக்கத்தில் உள்ள டிஎன்எச்பி காலனி ஆகிய பகுதிகளிலும் 7 பூங்காக்கள் அமைய இருக்கின்றன.
தற்போதைய நிலை
மேலும், அடையாற்றில் மூன்று, பெருங்குடியில் ஒன்று, சோழிங்கநல்லூரில் 9 என பூங்காக்கள் அமைய உள்ளன. தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 738 பூங்காக்கள், 220 விளையாட்டு மைதானங்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 204 சிறுவர் பூங்காக்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.