எதிர்ப்புக்கு பணிந்த சென்னை மாநகராட்சி: குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வர் பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும், உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனைபோல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்த கட்டண வசூல் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட கட்டணங்களையும், விதிகளையும் மீறினால் அதற்காக தனியாக அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். வீதிகளை மீறும் குற்றமாக பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால், 2,000 முதல் 5,000 வரையிலும், குப்பைகளை எரித்தால் 500 முதல் 2,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அசத்தும் சென்னை ஆட்டோ டிரைவர்கள்.. விவசாயிகள் போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் பாருங்க!
சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புக்கு பணித்த சென்னை மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வர் பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.