அதிமுக பொதுக்குழு தடைகோரிய மனு தள்ளுபடி.. சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபர உத்தரவு
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுக்குழு தொடர்பாக சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் இந்த மனு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த மனுவில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மனுவில் இருப்பது என்ன?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனவும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை.இதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.எனவே அதிமுக ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரத்து செய்ய கோரிக்கை
மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதால், எனவே இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்தக்கோரியும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரியும் மனுவில் தெரிவித்துள்ளர்.

தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த சென்னை அல்லிக்குளம் 23வது உரிமையியல் நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பு
இதற்கிடையே அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இன்று 5 மணிநேரத்துக்கு மேல் காரசார விவாதம் நடந்த நிலையில் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications