அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க
சென்னை: வரும் நாட்களில் தொடர்ந்து பண்டிகை, விழாக்கள் வர உள்ளதால் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக பல்வேறு பண்டிகைகள், விழாக்கள் நடைபெற உள்ளன.
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி வர உள்ளது. அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது.

பஸ்-ரயில்களில் கூட்டம்
இந்த தொடர் பண்டிகை, விழா காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இதனால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

அலைமோதும் கூட்டம்
தமிழகத்தை பொறுத்தமட்டில் தலைநகர் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதனால் சென்னையில் பண்டிகை, விழாக்காலங்களின் 2 நாட்களின் முன்பிருந்தே பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

8 ரயில் நிலையங்களில் அமல்
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கும். அந்த வகையில் தான் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் சார்பில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் எனும் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 8 ரயில் நிலையங்களில் அமலுக்கு வர உள்ளது.

ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்வு
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமானது ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க அக்டோபர் 1 முதல் 2023 ஜனவரி 31 வரை கட்டண உயர்வு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications