வேலூர் காவலருக்கு கட்டாய ஓய்வு பிறப்பித்த எஸ்.பி. உத்தரவு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சென்னை:திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக காவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உதத்ரவிட்டது.
வேலூர் ஆயுதப்படை காவலர் சிவக்குமார் என்பவர், 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை வெளியில் அழைத்து சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ததாகவும் 2005-ம் ஆண்டு இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இதை விசாரித்த வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி., பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்றும், ஏமாற்றியது மட்டும் நிருபணமாவதாக அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர், காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி கட்டாய ஓய்வை உறுதி செய்தார். இதை எதிர்த்து சிவகுமார் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி, கட்டாய பணி ஓய்வு அளித்து எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும் இந்த வழக்கை மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும், இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து குறைந்த தண்டனை விதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 சதவீத ஊதியத்தை பெற மனுதாரருக்கு உரிமையுள்ளதாகவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications