திமுக எம்.பி கதிர் ஆனந்த்துக்கு சிக்கல்! வருமான வரி தாக்கல் தாமதம்.. அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்!
சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி, கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.
கடந்த 2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தாக்கல் செய்ததுடன், 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியே நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்டப்படி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில், வருமான வரித்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா? வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி, கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications