''கோயிலுக்கு வரும்போது முறையா ஆடை அணிந்துவாங்க..'' - அட்வைஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கோயில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தொடர்ந்து குற்றம் சொல்லி வந்தனர்.
பிற மதத்தினரை இந்து கோயில்கலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மஹா சிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு! பக்தர்கள் தரிசனம்
கோயில்
தமிழக கோயில்களுக்கு வரும் பிற மதத்தினர் மற்றும் இந்து மதத்தினர் ஆடைக்கட்டுப்பாடுடன் வரவேண்டும் என கோயில்கள் முன் விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், பிற மதத்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரி, திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் அதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், சில புகைப்படங்களை தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு கோவில்களிலும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆடைக்கட்டுப்பாடு
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளது என்பதால், ஆடை கட்டுப்பாட்டு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்த பலகைகள் வைக்க வேண்டுமென பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது.
தீர்ப்பு
கோயில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், இதை கோயில் நிர்வாகங்கள் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். லெக்கின்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது என ஏற்கனெவே அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்து அதை, திரும்பப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.