நவம்பர் 10 - 13 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்... திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!
Recommended Video
சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக லேசான மழையும், தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மழையை கொடுக்காவிட்டாலும் இனி வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது : நேற்று தாய்லாந்து வளைகுடாவை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் நவம்பர் 10ல் அந்தமான் மற்றும் தென்கிழக்குக் கடல் பகுதி, நவம்பர் 11ல் வங்கக்கடல் பகுதி, வடஅந்தமான் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, நவம்பர் 12ல் மத்திய மேற்கு, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி குமரிக்கடல் இலங்கைக் கடல் மற்றும் இந்தியப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . அவ்வபோது லேசான சாரல் மழை மட்டுமே வரக்கூடும் என்று புவியரசன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.