சென்னைவாசிகளே கவலையைவிடுங்க.. நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா!
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பஸ்களில் நிற்க அனுமதியில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்டம் மக்கள் அதிகம் பயணம் செய்யும் இடங்களில் கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ளது. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவில் திருவிழா மற்றும் மதக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், மால்களில் 50% வாடிக்கையாளர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசு கூறியியுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று கொண்ட பயணிக்க அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பஸ்களில் நிற்க அனுமதி இல்லாததால் சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- தற்பொழுது தமிழகத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துகின்ற வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஸ்களில் நிற்க அனுமதியில்லை
அந்தவகையில், நேற்றைய தினம் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பஸ்கள்
இந்நிலையில், பொதுமக்கள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, நாளை (10.04.2021) சனிக்கிழமை முதல், 300 முதல் 400 பேருந்தகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.