பிரச்சினையில்லை! ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்..உடல்நிலை சீராக உள்ளது! எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை
சென்னை: லேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
நேற்று மாலை வரை தங்கள் தரப்பு நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது குறித்து தீவிர ஆலோசனை செய்து வந்தார்

கொரோனா சோதனை
அதே நேரத்தில் அவருக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல்நல தொந்தரவுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர் ஒருவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பன்னீர்செல்வம் அவரை சந்திப்பதற்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு இருந்த அதே அறிகுறிகள் தனக்கும் இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா உறுதி
அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் இல்லை என்றாலும் லேசான அறிகுறிகள் மட்டுமே ஓபிஎஸ்க்கு இருக்கிறது இருந்தும் அவரது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள தனி அறையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நலம் பெற வேண்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்மான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் திமுகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்ஐ 'அதிமுக ஒருங்கிணைப்பாளர்' என்று குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை அனுமதி
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை தொடர்பாக எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் நலமுடன் உள்ளார். நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications