இந்தியாவிலேயே இப்படி கிடையாது! சென்னை மாநகராட்சி எடுத்த அசாத்திய முடிவு! அதுவும் சரியா ஜூன் மாசத்துல
சென்னை: "பிரைட்" மாதமான ஜூன் மாதத்தில் சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு ஒன்று சமூக செயற்பாட்டாளர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுக்க ஜூன் மாதம் பிரைட் மாதமாக கொண்டாடப்படும். ஜூன் 1ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை இந்த மாதம் கொண்டாடப்படும்.
உலகம் முழுக்க இருக்கும் எல்ஜிபிக்யூஐ+ பிரிவினரை ஆதரிக்கும் வகையிலும், அவர்களுக்கு சம மரியாதை கொடுக்கும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த மாதம் கொண்டாடப்படும்.
பிரைட் மாதம்
உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த மாதத்தின் இறுதி நாட்களில் நீண்ட பேரணிகள் நடத்தப்படும். சென்னையில் கூட பிரைட் வாக் என்ற பெயரில் பேரணிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் இதே ஜூன் மாதத்தில் சென்னை மாநகராட்சி முக்கியமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் முக்கியமான ஒரு பணியை மேற்கொள்ள திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோரை பணிக்கு அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
டிரோன்
சென்னையில் பல்வேறு பணிகளுக்கு தற்போது டிரோன் பயன்படுத்தப்படுகிறது. டிரோன் மூலம்தான் சென்னையில் பல இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோல் பூச்சு மருந்தும் டிரோன் மூலம் அடிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரோன்களை இயக்க பள்ளி படிப்பு முடித்து மேற்படிப்பை தொடர முடியாத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பணி வழங்கப்பட்டது
இந்த நிலையில் சென்னையில் டிரோன் இயக்கம் பணிகளுக்கு திருநங்கைகள் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறை ஒரு மாநகராட்சி இந்த பணிகளை திருநங்கைகள், நம்பிகளுக்கு வழங்குகிறது. அதன்படி முதல் கட்டமாக 7 திருநங்கைகள், திருநம்பிகள் டிரோன் இயக்கம் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர முடியாதவர்களை தேடி பிடித்து, முதல் கட்டமாக 7 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணி ஜூலையில் இருந்து தொடங்கும்.
Recommended Video
சம்பளம் எவ்வளவு
இவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இவர்கள் 7 பேர் மட்டுமின்றி இன்னும் 15 பேருக்கும் மேற்பட்ட திருநங்கைகள், திருநம்பிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு டிரோன் இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அவர்களுக்கு ஆங்கில பயிற்சி, பின்னர் டிரோன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சியில் இவர்களுக்கு டிரோன் இயக்கும் பணிகள் அளிக்கப்படுகின்றன .