சென்னை தனியார் வங்கி கொள்ளையில் 3 பேர் அதிரடி கைது.. 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல்! பரபர தகவல்
சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் நேற்று 32 கிலோ தங்க நகைகள் கொள்ளைப்போன வழக்கில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி உள்ளது. இந்த வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் வங்கியின் லோளாளர் சுரேஷ் மற்றும் வாடிக்கையாளர் சேவை எக்ஸ்சிகியூட்டிவ் விஜயலட்சுமி ஆகியோர் பணியில் இருந்தனர். காவலாளியாக சரவணன் இருந்தார்.

32 கிலோ நகைகள் கொள்ளை
இந்நிலையில் நேற்று மதியம் வங்கியின் முன்னாள் ஊழியரும் தற்போதைய வில்லிவாக்கம் கிளை ஊழியருமான முருகன் வந்தார். சரவணனுக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை அவர் உள்பட 3 பேர் கொடுத்தனர். அதன்பிறகு வங்கிக்குள் நுழைந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களை கழிவறையில் அடைத்து சாவி மூலம் லாக்கரை திறந்து 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் தலைநகர் சென்னையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போலீசார் தீவிர விசாரணை
இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மண்டல மேலாளராக வேலை பார்த்த சென்னை பாடியை சேர்ந்த முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. முருகன் தற்போது வில்லிவாக்கத்தில் உள்ள அதே வங்கியின் கிளையில் பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீசார் தேட தொடங்கினர். முருகன் பற்றி வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

3 பேர் அதிரடி கைது
இந்நிலையில் பாலாஜி என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சில முக்கிய விபரங்களை போலீசார் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் சந்தோஷ், சக்திவேல் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Recommended Video

15 கிலோ நகைகள் பறிமுதல்
இந்நிலையில் கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை கைது செய்து 17 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் வங்கி நிர்வாகம் சார்பில், ‛‛வங்கியின் நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications