சென்னை PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள சென்னை PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளி-கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன.மாணவ-மாணவிகளுக்கு 'ஆன்-லைன்' மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் 'ஆன்-லைன்' வழி கல்வியின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்கள் எழுந்தது.
ஆன்லைன் கல்வி
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இவர், 'ஆன்-லைன்' மூலம் பாடம் நடத்தும்போது, 'அரைகுறை அடை அணிந்து கொண்டு மாணவிகளின் உடை, அழகை வர்ணிப்பதாக சமூக வலைதளங்களில் வெளிப்படையாக புகார்கள் எழுந்தது. மேலும் 'வாட்ஸ்-அப்'-பில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியும், செல்போனில் அநாகரீகமான முறையில் பேசியும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஆதாரங்களுடன் ராஜகோபால் மீது குற்றச்சாட்டுகள் வெளியானது.
நடவடிக்கை தேவை
இதனால் சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. ஆசிரியர் ராஜகோபாலனை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக எம்பி கனிமொழி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
நடவடிக்கை உறுதி
இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதமும் எழுதினார். இதனிடையே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அறிவித்தார்
பள்ளி நிர்வாகம்
இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சார்பில், பெற்றோர்களின் 'வாட்ஸ்-அப்' எண்ணிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், எப்போதும் மாணவர்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
விசாரணை
இதனிடையே ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரது 'லேப்-டாப்', செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருந்ததாக போலீசார் கூறினர். தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை ஜாலியாக செய்திருக்கிறார் ராஜகோபால். இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாக்குமூலத்தில் ராஜகோபால் கூறியிருந்தார்.
பாலியல் துன்புறுத்தல்
அவரிடம் நடந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி இருப்பதும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது ஆசிரியர் ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,