சென்னை புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே ஐஜி அருள் ஜோதி!
சென்னை: சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதி கூறினர்.
சென்னை மாநகருக்குள்ளும் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்து வந்தார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் ஐடி, வாகனஉற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் பயணிப்போர், மின்சார ரயில்களில் பயணித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆறு மாதங்களாக புறநகர் ரயில்கள் இயக்கப்படவில்லை. எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான தகவல்களும் இது வரையிலும் ரயில்வேயால் வெளியிடப்படவில்லை.

மக்கள் வசதி
இதனால் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயில் போக்குவரத்து வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அனுமதித்த அரசு, பேருந்து சேவைக்கு அனுமதி அளித்த அரசு, மின்சார ரயில்களின் சேவை தொடங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

ரயில் டிக்கெட்
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் பணிக்குச் சென்று வரும் நிலையில் மின்சார ரயில் இல்லாதது சென்னை மக்களுக்கு மிகவும் சுமையாக உள்ளது. ஏனெனில் பேருந்தில் பயணிப்பதற்கு வசதியும் இல்லை. ரயிலில் என்றால் பாஸ் எடுத்துகுறைந்த டிக்கெட்டில் பயணிக்க முடியும். அத்துடன் விரைவாகவும் வேலைக்கு சென்று வர முடியும் என்பதால் சென்னை மக்களுக்கு மின்சார ரயில் என்பது மிகவும் அத்தியாவசியமானது ஆகும்.

சென்னை புறநகர் ரயில் சேவை
எனவே மீண்டும் புறநகர் ரயில்களை சென்னையில் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே பரிசீலித்து வருகிறது. ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதி இது பற்றி கூறும் போது
சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதில் பயணிகள் பயணிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் பயணிகள் ரயிலில் பயணம் ,மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார்.

விரைவில் அறிவிப்பு வரும்
இதனிடையே முதல்கட்டமாக குறைந்த அளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக, மின்சார ரயில்களில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் ரயில் வட்டாரங்கள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ரயில் வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எனவே, வாரியத்தின் அனுமதி வந்தவுடன் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதியும் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்று கூறியிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் புறநகர் ரயில் சேவை அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications