தலைமை நீதிபதி இடமாறுதல்....கொலிஜியம் முடிவு சரியே...574 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு கடிதம்
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்த கொலிஜியத்தின் முடிவை எதிர்த்து கடிதம் எழுதி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரை செய்த கொலிஜியத்தின் முடிவு சரிதான் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 574 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக பாஜக வழக்கறிஞர்பிரிவு நிர்வாகி பால்கனகராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாற்றம் சரியல்ல என ஒரு பிரிவும், மாற்றம் சரிதான் என ஒரு பிரிவும் எதிரெதிர் அணியில் நிற்கும் நிலை உயர் நீதிமன்றத்தில் உருவாகியுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, ஜனவரி 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 10 மாதமே பணியாற்றிய நிலையில் அவரை மேகலாய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் செப்டம்பர் 16 ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை குறித்த தகவலை நவம்பர் 9 ஆம் தேதி பொதுவெளியில் வெளியிடப்பட்டது. கொலீஜியத்தின் முடிவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
அவரது இடமாற்றத்திற்கு வழக்கறிஞர் சமூகத்தினர் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதை திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கைகளை கொலீஜியத்திற்கு அனுப்பியவண்ணம் இருந்தனர். 237 வழக்கறிஞர்கள் கோரிக்கை, 31 மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை, மெட்ராஸ் பார் அசோசியேசன் தீர்மானம், வழக்கறிஞர் அமைதி போராட்டம் என ஒவ்வொரு கட்டமாக கோரிக்கைகள் தொடர்நதன. நேற்று காலை சென்னை உயர் நீதிமன்றம் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை நீதிபதி இடமாற்றத்தின் பின் அரசியல் உள்ளது, நியாயமாக நடந்தால் இடமாற்றம் என்றால் பரவாயில்லை, 10 மாதத்தில் மாற்றவேண்டிய காரணம் என்ன? இவ்வாறு நேர்மையாக நடப்பவர்களை இடமாற்றம் செய்தால் நீதிபதிகள் பயப்படும் நிலை உருவாகும், அதன் பின்னர் நீதிமன்றம் இருக்கும், நீதி இருக்காது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக செயலாளர் ராஜீந்தர் காஷ்யாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்தை எதிர்த்து பார்கவுன்சில், வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில் உயர் நீதிமன்ற பாஜக தரப்பு நிர்வாகி பாலகனகராஜ் 574 பேர் கையெழுத்திட்டு கொலிஜியத்தின் முடிவை ஆதரித்து மனு அனுப்பியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பேட்டியளித்த பாஜக வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறியதாவது:
"உச்ச நீதிமன்ற கொலீஜிய நடைமுறை சரியானது, மாற்றக்கூடாது என்றும், அதில் தலையீடுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகும். கொலீஜியத்திற்கு ஆதரவாக 574 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.கொலீஜிய முடிவில் மத்திய அரசும் கூட தலையிட முடியாது. மேகாலயாவிலும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொலீஜிய முடிவை ஏற்க வேண்டும், தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமானி மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்காமல் ராஜினாமா செய்தார்" எனத் தெரிவித்தார்.