1000 படுக்கை வசதி.. கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ரூ.240 கோடியில் சுமார் 1,000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்காக ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை சுமார் 1,000 படுக்கைகளுடன், அதிநவீன வசதிகளுடன் தரைதளம் மற்றும் 6 மேல் தளங்கள் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மருத்துவமனை ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை திறந்து வைக்க ஏற்கெனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் குடியரசுத் தலைவர் செரிபியாவுக்கு சென்றுவிட்டதால் மருத்துவமனை திறப்பு தேதி தள்ளி போனது.

குடியரசுத் தலைவர் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனை திறப்பு குறித்த எந்த வித பதிலும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. எனவே இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக மருத்துவமனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications