கன்ட்ரோல் ரூமில் திடீர் விசிட்.. வண்டியை மகாபலிபுரத்துக்கு விட்ட முதல்வர்- கூட போனது யாருனு பாருங்க!
சென்னை : இன்று இரவு திடீரென சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், முகாம்களில் உள்ள மக்களிடமும் குறைகளைக் கேட்டார்.
இதையடுத்து, மாமல்லபுரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பதைப் பார்வையிட்டு, பல்வேறு நாடுகளின் வீரர்களிடம் ஏற்பாடுகள் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.
காவி ட்ரெஸ்.. ஜிம்மில் கடும் ஒர்க்அவுட்.. பின்னணியில் 'பாராட்டு செய்தி’- அசத்தும் முதல்வர் ஸ்டாலின்!
மழை வெள்ளம்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், ஒகேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்களிடம் மழை, வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மக்களிடம் குறைகளைக் கேட்டார்
தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவேரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு அவர்கள் தேவைகள் குறித்தும், செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மாமல்லபுரம் சென்ற முதல்வர்
அதனைத் தொடர்ந்து, மாமல்லபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பார்வையிட்டார். மேலும், செஸ் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் வீரர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலின், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடச் சென்றபோது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார்.