செம்பரம்பாக்கம் ஏரி எப்படி இருக்கிறது..? நேரில் விசிட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை: வடகிழக்குப் பருவமழையையொட்டி, புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரங்களைக் கேட்டறிந்தார்.
Recommended Video
இதே போல், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்தும் அவர் நேரில் பார்வையிட்டார்.
மழைவெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் முன்னோட்டமாக முதல்வரின் ஆய்வு கருதப்படுகிறது.

குடிநீர் ஆதாரம்
சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீராதாரமாக விளங்கும் புழல் ஏரியானது 21.20 அடி உயரமும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். தற்போது இப்புழல் ஏரியில் 18.88 அடி உயரம், 2786 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் உபரி நீர் கால்வாயின் மொத்த நீளம் 13,500 மீட்டர் ஆகும். சென்னை மண்டலத்திற்கு வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு வெள்ளத்தடுப்புப் பணிக்காக மொத்தம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் உள்ள அடைப்பான்களை 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், வடகிழக்குப் பருவமழையையொட்டி ஏரியின் கரைகளைத் தொடர்ந்து கண்காணித்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பெரிய ஏரி
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானதாகும். செம்பரம்பாக்கம் ஏரியானது தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரி பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.மேற்படி ஏரியிலிருந்து வெளியேறும் மிகைநீர் அடையாற்றில் விழுந்து தென்சென்னை மூலமாக அடையாறு முகத்துவாரத்தில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்பு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த ஏரி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரி சென்னைக்குக் குடிநீர் வழங்கும் இரண்டாவது கடைநிலை ஏரியாகும்.

எவ்வளவு ஆழம்?
கிருஷ்ணா கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவின் உயரத்தை 22 அடியிலிருந்து 24 அடி கொண்டதாக 2 அடி உயர்த்தியும், அதன் கொள்ளளவானது 3120 மில்லியன் கன அடியிலிருந்து 3645 மில்லியன் கன அடியாகவும் 1996ல் உயர்த்தப்பட்டது. தற்போதைய நீரின் ஆழம் 20.77 அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயின் மொத்த நீளம் 6200 மீட்டர் ஆகும்.

தடையின்றி தண்ணீர்
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்ஏற்பாடாக 37.50 லட்சம் ரூபாய் செலவில் மணப்பாக்கம், குன்றத்தூர், கோவூர், தந்தி கால்வாய், நத்தம் கால்வாய், ஆகிய கால்வாய்களில் உள்ள நீரியல் தாவரங்கள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் சென்று அடையாற்றில் கலக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications