ஓய்வு தினத்திலும் ஆய்வு! எந்த லெவலில் திட்டப்பணிகள்? சென்னையை சுற்றி வந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: ஓய்வு தினமான இன்றும் தனது ஆய்வால் சென்னையையும், அதிகாரிகளையும் பரபரப்பாக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவமனை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அவர் மணப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டுக்கும் சென்று சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
போலீஸ் ஸ்டேஷன் போனால் நியாயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் -முதலமைச்சர் அறிவுரை
ஓய்வு தினம்
ஓய்வு நாளான இன்று தனது பரபரப்பான ஆய்வால் கவனம் ஈர்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைச்சர் மா.சுப்ரமணியனையும், தாமோ அன்பரசனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு காலையிலேயே ஆய்வுக்கு புறப்பட்ட அவர், நேராக கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்திற்கு சென்று அங்கு ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவமனை கட்டிடப் பணிகளை பார்வையிட்டார். மேலும், கட்டுமானப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களையும் எடுத்துக் கூறினார்.
முதல்வர் அறிவுறுத்தல்
பணிகளுக்கு அதிக நாட்களை எடுத்துக்கொள்ளாமல் விரைந்து முடிக்க அறிவுறுத்திய அவர் அதன் பிறகு மணப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்துவதால் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். சென்னை மேயர் ப்ரியா ராஜன் உட்பட மாநகராட்சி அதிகாரிகளும் அந்த ஆய்வில் பங்கேற்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு
முதலமைச்சர் ஆய்வு நடத்தச் சென்ற மணப்பாக்கம் பகுதியில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லமும் அமைந்திருந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி சில நிமிடங்கள் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் சஞ்சய் சம்பத்தும் உடனிருந்தார்.
இளங்கோவன் நன்றி
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக கைச் சின்னத்தில் வாக்குக் கேட்டு திமுக அமைச்சர்கள் பிரச்சாரத்தை தொடங்கியதற்காக உருக்கமுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்தச் சந்திப்பை முடித்துவிட்டு இன்னும் சில இடங்களுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு எந்த அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்து அறிந்துகொண்டார்..