மடார் மடார் என்று பதில் சொன்னவர் ஜெயரஞ்சன்! திமுக மீதான தாக்குதலை கேடயமாக தடுக்கிறார் -ஸ்டாலின்
சென்னை: பொய்யையும், அவதூறுகளையும் சொல்லி திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தி வந்தவர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் மடார் மடார் என்று தலையில் கொட்டிப் பதில் சொன்னவர் ஜெயரஞ்சன் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனின் அறிவு கூர்மையை அறிந்த பின்னரே நம்மோடு அவர் இருக்க வேண்டும் என்று தாம் நினைத்ததாக முதல்வர் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய விவரம் வருமாறு,

மடார் மடார் என்று பதில்
நம்முடைய பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அறிமுகம் தேவையில்லை. செய்தித் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அந்த அளவுக்கு அவர் வெகுமக்களிடையே பிரபலமாகி விட்டவர். பொய்யையும், புனைசுருட்டையும், அவதூறுகளையும் சொல்லி திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி வந்தவர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் மடார் மடார் என்று தலையில் கொட்டிப் பதில் சொன்னவர் ஜெயரஞ்சன்.

சிலர் மிரட்டினார்கள்
பொருளாதாரம் என்றாலே, சில ஆங்கிலச் சொற்களை வைத்துக் கொண்டு சிலர் மிரட்டினார்கள். ஆனால், அவர்களது சொற்களையே உள்வாங்கி, அவர்கள் மீதே திருப்பி எறியக்கூடிய வித்தைக்காரர் நம்முடைய ஜெயரஞ்சன். இது போன்ற விவாதங்கள் வரும்போது, நானே பலமுறை அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறேன், நன்றி சொல்லி இருக்கிறேன்.

கேடயமாக ஜெயரஞ்சன்
சோஷியல் மீடியா வளர்ந்து வந்த இந்த நேரத்தில் திமுக மீதான பொய்யான தாக்குதலை தடுத்த மாபெரும் கேடயம் தான் நம்முடைய ஜெயரஞ்சன் அவர்கள். இந்த அளவு சிந்தனைகளும் அறிவு கூர்மையும் கொண்டவர் நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைத்துதான், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவினுடைய துணைத் தலைவராக அவரை அரசின் சார்பிலே நாம் நியமித்தோம்.

வழி காட்டுபவராக
இன்று அரசு கொள்கை வகுப்பதில், ஆலோசனைகளை வழங்குபவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். தமிழினத்தின் மேன்மையை எந்த வகையில் எல்லாம் செயல்படுத்த முடியும் என்று வழிகாட்டுபவராக - அப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கக் கூடியவராக நம்முடைய ஜெயரஞ்சன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications