கொம்பன் இல்லைங்க... குழந்தை மாதிரி சின்னதம்பி... ஆதரவு குரல் அதிகரிப்பு
கொடைக்கானலில் பனியுடன் அதிக அளவில் மேகமூட்டமாக வானிலை காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் ஆகி இருக்கிறது.
Recommended Video
சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கி யானையாக மாற்றக்கூடாது என்ற வன ஆர்வலர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், யானையை மீண்டும் வனத்திற்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடுமலை அருகே 3 நாட்களாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை கும்கி யானை கலீம் துணையுடன் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழிசை ட்வீட்
இந்தநிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், உணவு தண்ணீர் இல்லாமல் சுருண்டு விழுந்தான் சின்ன தம்பி என்ற செய்தி கேட்டு கவலையுற்றேன். மீண்டும் புறப்பட்டான் சின்னதம்பி வனத்தை நோக்கி என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்றேன்!காப்பாற்றி உயிர் காத்த வனத்துறை ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை
வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது, தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போல் அதை கும்கியாகிவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது, இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ட்வீட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
சின்னதம்பி பாதுகாப்பு குழு
இதற்கிடையே, சின்னத்தம்பி யானையை தடாகம் பள்ளத்தாக்கிலே விடக் கோரியும் யானைகளின் வழித் தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திங்கட்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளதாக சின்னதம்பி பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து, 100 கி்மீ பயணம் செய்து, வீடுகள், மனிதர்கள், வாகனங்கள் என்று வழி நெடுகிலும் பல விஷயங்கள் இருந்தும் சேதத்தை ஏற்படுத்தாமல், தன் வாழ்விடத்தைத் தேடி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறான் சின்னதம்பி என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சின்னதம்பி காட்டுயானைக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதால், கும்கி யானையாக மாற்றப்படும் என்ற வனத்துறையினரின் முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.