சிட்லபாக்கம் ஏரியை தூர்வார ரூ.25 கோடி ஒதுக்கீடு- முதல்வர் பழனிச்சாமி
சென்னை: சென்னையில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை சீரமைக்கும் பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.என சட்டசபையில் விதிஎண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று சிட்லப்பாக்கம் ஏரி. குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் அருகிலுள்ள இந்த ஏரிதான் அந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி இப்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது. சென்னையில் மற்ற ஏரிகளில் எல்லாம் தண்ணீர் வற்றி வறண்டு போய்விட்ட நிலையில், இந்த ஏரியில் நீர் இருப்பு கணிசமாக உள்ளது.
மேலும் சிட்லபாக்கம் ஏரியை தூர்வாருமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு அமைப்புகள் இணைந்து சமீபத்தில் அரசு ஒத்துழைப்புடன் தூர் வாரும் பணியையும் மேற்கொண்டனர். இந்நிலையில் சிட்லப்பாக்கம் ஏரியை சீரமைக்கும் பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.என சட்டசபையில் விதிஎண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.
சிட்லபாக்கம் ஏரி புதுப் பொலிவு பெற்று நீர் நிரம்பிக் காணப்படும் நன்னாளுக்காக மக்கள் காத்துள்ளனர்.