அதிமுவில் அன்று நால்வர் அணி.. இன்று மூவர் அணி?.. விரைவில் வெளியே வரும் பூனைக்குட்டி?
சென்னை: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை புதிய அணிகள் உருவாவதும் பிறகு சமாதானம் ஆகி மீண்டும் அதிமுகவிலேயே இணைவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது திரைமறைவில் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என மூவர் அணி செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்புவிடுத்த போதிலும் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்க வில்லை. சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸுடன இணைய முடியாது என எடப்பாடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு வாதத்திலேயே சொல்லிவிட்டார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என டெல்லி மேலிடம் வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காமல் இது தொண்டர்களின் விருப்பம். அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து தொண்டர்களுடன் பேசித்தான் முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலூட்டி வளத்த கிளி! இவங்க சண்டை ஓயாது.. நம்ம 'அங்கேயே’ போவோம்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பக்கா மூவ்!
மேலிட கோபம்
இதனால் கோபமடைந்த டெல்லி மேலிடம் தலைமை சசிகலாவை தொடர்பு கொண்டு "நீங்கள் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து கட்சி பணியாற்றுங்கள்" என கூறியதாம். இதையே ஓபிஎஸ்ஸுக்கு அறிவுறுத்தியதால் தற்போது திரைமறைவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்போரிடம் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி பணியாவிட்டால், சசிகலா அவர்களிடம் போனில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆக தற்போது திரைமறைவில் மூவரணியாக இவர்கள் செயல்பட்டு வருவது தெரிகிறது. மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியானவுடன் அந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைகிறது என்பதை பார்த்துவிட்டு இந்த மூவர் அணி தனித்து செயல்படுமா இல்லை ஒருங்கிணைந்த அதிமுகவில் இந்த மூவரும் செயல்படுவார்களா என்பது தெரியவரும்.
பிளவுகள்
இது போன்ற அணிகள், பிளவுகள் என்பது எம்ஜிஆர் காலம்தொட்டே இருந்து வருகிறது. எம்ஜிஆரின் தஞ்சை மாவட்ட தளபதியாக இருந்த எஸ்.டி.சோசமசுந்தரம், ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் முக்கியத்துவம் தருவதை எதிர்த்து தனிக்கட்சியே தொடங்கினார். பின்னர் தனிக்கட்சி எடுபடாத நிலையில் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்து கொண்டார். எஸ்டிஎஸ்ஸைப் போல எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் பல குழுக்கள் இருந்தன. நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ, ராஜாராஜம், அரங்கநாயகம் என சீனியர்கள் ஒரு அணியாகவும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஜூனியர்கள் ஒரு அணியாகவும் இயங்கியதும் உண்டு.
நால்வர் அணி
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்தது. பின்னர் இரு அணிகளும் இணைந்த நிலையில் ஜெயலலிதாவிடம் சசிகலா குடும்பத்தின் செல்வாக்கு ஓங்கியது. சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் என ஒரு நால்வர் அணி ஜெயலலிதாவை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு எதிராக நெடுஞ்செழியன் தலைமையிலான நால்வர் அணி உதயமானது. பின்னர் திருநாவுக்கரசர், சாத்தூர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் குழுவாக அதிமுகவில் கலகம் எழுப்பிய வரலாறும் உண்டு.
யார் உண்மையான அதிமுக
யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க அப்போதே கூவத்தூர் போன்ற கூத்துகளை ஜெயலலிதாவுக்காக அரங்கேற்றியவர்தான் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன். இன்றைய திமுக அமைச்சர். ஜெயலலிதாவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடியும் வழக்குகள் தொடர்ந்த போதும் அடிப்படை உறுப்பினர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற வாதத்தை வைத்து ஜெயலலிதா வெற்றி கண்டார். அன்று முதல் அதிமுக அவர்வசமானது.
ஐவர் அணியில் தப்பியவர் எடப்பாடி
ஜெயலலிதாவின் கடைசி காலங்களில் அதிமுகவில் ஐவர் அணி வலம் வந்தது. ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி என இந்த ஐவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அத்தனை பேரும் சசிகலா அண்ட் கோவின் பிடியில் இருந்தனர். சசிகலா அண்ட் கோவின் பிடியை மீறிய ஐவர் அணி திலகங்கள் பட்டபாட்டை நாடறியும். அதில் தப்பிப் பிழைத்து முதல்வர் நாற்காலியையும் பிடித்தவரே எடப்பாடி பழனிசாமி.