மேக வெடிப்பு போல கொட்டிய மழை... வெள்ளத்தால் பல மணி நேரம் ஸ்தம்பித்த சென்னை - மழைக்கு காரணம் என்ன
கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து தமிழக தலைநகரமான சென்னை முற்றிலும் ஸ்தம்பித்தது. எதிர்பாராத திடீர் மழைக்கான காரணத்தை வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பல மணிநேரம் விடாமல் கொட்டிய மழையால் சென்னையில் பல பகுதிகளில் பெருவெள்ளம் சூழ்ந்தது. பல சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரால் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்தன. பல கிலோ மீட்டருக்கு சாலைகள் வரிசை கட்டி நின்றன. சென்னையில் மேக வெடிப்பு போல திடீரென பெய்த மழைக்கு காரணம் மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்புக்கு வந்ததுதான் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஆண்டுதோறும் வடகிழக்குப்பருவமழை காலத்தில் புயல், சூறாவளியால் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். கடலோரங்களில் உள்ள சில பகுதிகள் மட்டுமே பாதிப்பிற்கு ஆளாகும். 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் சென்னை மாநகரமும் புறநகர் பகுதிகளும் அதிகம் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனது.
கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி கொட்டிய அதிகனமழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. நகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. மழை தொடர்ந்து நீடிக்கவே ஏரிகள் நிரம்பின. உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் புறநகர் பகுதிகளில் குளங்கள் முற்றிலும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

10 மணி நேரத்தில் கொட்டிய மழை
டிசம்பர் மாதத்தில் மழை சற்றே ஓய்ந்தது. வெள்ளநீரும் படிப்படியாக வடியத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பெருமழை பெய்து சென்னைவாசிகளை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் பெய்த மழை அளவை விட நேற்று ஒரே நாளில் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஸ்தம்பித்த தலைநகரம்
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை, ஆர்.கே சாலை, எழும்பூர், கடற்கரை சாலை, மெரீனா கடற்கரை சாலை, காமராஜர் சாலை என முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம்போல தேங்கியது. சுரங்கப்பாதைகளில் நீர் நிரம்பியது. திடீர் மழையால் அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் நத்தை போல நகர்ந்தன. மாலையில் அலுவலகம் விட்டு கிளம்பியவர்கள் பல மணி கழித்தே வீடு திரும்பினர்.

மெட்ரோ ரயில்களில் கூட்டம்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் அதிகனமழை பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சென்னையில் மேக மூட்டமும் பல பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்திருந்தது. எதிர்பாராமல் கொட்டித்தீர்த்த மழையால் தலைநகரமே ஸ்தம்பித்து போனது. மேட்டுப்பாங்கான பகுதிகளும் தப்பவில்லை. இரவு நேரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

கள ஆய்வில் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டார். நான்கு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். நேற்றைய தினம் இரவு பலருக்கும் மறக்க முடியாத இரவாகிப் போனது. மின்சாரம் தாக்கியதில் மூன்று உயிர்கள் பறிபோயின.

விடாமல் கொட்டிய மழை
சென்னையில் மூன்று இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. டிஜிபி அலுவலகம், எம்ஆர்சி நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் 20 செமீக்கு மேல் அதிகனமழையாக பதிவாகியுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதிகனமழைக்குக் காரணம்
எதனால் இப்படி திடீரென மழை கொட்டித்தீர்த்தது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியசரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடல் பரப்புக்குள் நிலவிய மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்புக்குள் வந்ததால் சென்னையில் கனமழை கொட்டியதாகவும் பிற்பகலுக்கு மேல் மேலடுக்கு சுழற்சி கடற்கரையை ஒட்டிய பகுதிக்குள் நிலவியதால் அதிககனமழை பெய்தது என்றும் கூறியுள்ளார். இந்த மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகரும் போது மழை படிப்படியாக குறையும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications