சர்கார்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. அதிர்ச்சியில் தினகரன்
Recommended Video
சென்னை: 'சர்கார்' திரைப்பட விவகாரத்தில் வெகு நாட்களுக்கு பிறகு அதிமுக மட்டுமின்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில், ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் அதிமுக தரப்பில் இருந்து எந்த ரியாக்சனும் வரவில்லை. ஆனால் அந்த படத்தில் அதிமுக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகு புதன்கிழமை முதல் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
சர்கார் பிரச்சினை ஓவர்.. முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு!
ஜெயலலிதா பெயர்
அதிலும் குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயரை எதிர்மறைப் கதாபாத்திரத்திற்கு சூட்டி உள்ளதை சுட்டிக் காட்டி அதிமுகவினர் தீவிர போராட்டங்களை நடத்தினர். தியேட்டருக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகளை கிழிப்பது என்று இந்த போராட்டம் வன்முறையாக மாறத் தொடங்கியது.
அதிமுக தட்டி கேட்கும்
ஆனால் தியேட்டரில் போலீசாரை நிறுத்தியதோடு, அரசு தன் கடமையை முடித்துக் கொண்டது. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதே சிறந்தது என்று முடிவுக்கு முதல்வர் வந்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவுக்கு அவமானம் என்றால் அதை தட்டிக் கேட்பது அதிமுகதான் என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று ஆட்சியாளர்கள் நினைத்ததாக கூறப்படுகிறது.
தினகரனுக்கு சிக்கல்
அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பதால் தினகரன் அதற்கு மாற்றாக எதையாவது சொல்வார், எனவே அவர் ஜெயலலிதாவுக்கு எதிரானவர் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் உருவாகும் என்பது தான் கேம் பிளான். அதற்கு ஏற்பத்தான் தினகரனும் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டார்.
அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களை கண்டித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்ய நினைத்தார் தினகரன். ஆனால் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி விட்டதாக கூறி திரைப்படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு அளவுக்கு மேல் அரசை அவரால் விமர்சிக்க முடியவில்லை.
அதிமுக அணி
தினகரன், 'சர்கார்' படக்குழுவினரை விமர்சித்து அதிமுகவினருடன் ஓரணியில் இருப்பதைப் போல மக்கள் முன்னிலையில் காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்ப, அதிமுக இந்த போராட்டதில் ஈடுபடுகிறது, என்று வலிக்காத மாதிரி கிடைத்த இடைவெளியில் கொஞ்சம் விமர்சனமும் செய்து கொண்டார் தினகரன்.
முன்பு போராட்டம் இல்லை
ஆனால் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோதும், முன்னதாக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, யாரையும் பார்க்க அனுமதிக்காதபோதும் எந்த எதிர்வினையும் காட்டாத அதிமுகவினர், 'சர்கார்' பிரச்சினைக்கு மட்டும் எதிர்வினை காட்டுவதற்கு அரசியல் ஆதாயம் தான் நோக்கம் என்று கூறப்படுகிறது.
கட்சிக்கு வலிமை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் ஒன்றாக இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியது என்றால் அது 'சர்கார்' பிரச்சினைக்காக தான். அந்தவகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஒன்றிணைந்து போராடி இருப்பது என்பது ஒருவகையில் அக்கட்சிக்கு பலத்தைக் கொடுக்கும் என்று மேலிடம் கருதுகிறது. சர்கார் விவகாரத்தில் ஒரு பக்கம் தினகரனை தர்மசங்கடத்தில் சிக்க வைத்ததோடு அதிமுகவினரை ஒற்றுமை படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 'தலைவா' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இப்போது ஜெயலலிதா வழியில் தான் ஆட்சி நடக்கிறது என்பதை தனது கட்சியினருக்கு அழுத்தம் திருத்தமாக காட்டுவதற்கு 'சர்கார்' திரைப்படத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி எடப்பாடி.