அடுக்கடுக்கான திட்டங்களை ராதாபுரம் தொகுதிக்கு வழங்கிய அதிமுக அரசு.. லிஸ்ட் போட்டு முதல்வர் பரப்புரை
சென்னை: மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை தரும் ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்று, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .
Recommended Video
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் . இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று அவர் பிரச்சாரம் செய்தார். ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவருக்கு எம்எல்ஏ இன்பதுரை சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராதாபுரம் நம்பர்-1 என்று எழுதப்பட்டிருந்த வரவேற்பு குடைகள் பொருத்தப்பட்டிருந்தன.
பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூறியதாவது:
அம்மாவின் அரசு 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியையும், அம்மாவின் வழியில் நடக்கும் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து எங்கள் ஆட்சியில் கிடைத்த நன்மைகளை எண்ணி பாருங்கள். திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என அவதூறு செய்தியை பரப்பி வருகிறார்.
ராதாபுரம் தொகுதியில் ஐடிஐயை கொண்டு வந்திருக்கிறோம், திசையன்விளையை தலைமயிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது, ராதாபுரம் கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் வகையில் 120 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம், உவரி கப்பல் மாதா கோவில், ஆற்றாங்கரை பள்ளி வாசல், விசுவாமித்தரர் கோவில், தெற்குகள்ளிகுளம் புனித மாதாகோவில் ஆகியவை சுற்றுலா தலங்கலாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுக்கடுக்கான திட்டங்களை ராதாபுரம் தொகுதிக்கு வழங்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத் தட்ட 7000 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காக செலவிடப்பட்டு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆனால் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் பொதுமக்களை பார்க்கவில்லை. அதிகாரம் இருக்கும் போது மக்களிடம் மனு வாங்க வில்லை. அதிகாரம் இல்லாதபோது மனு வாங்கி வருகிறார்.
முதல்வர் குறை தீர்க்கும் திட்டம் அமைக்கப்பட்டு 9 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களை பெற்று அனைத்து மனுக்களையும் பரிசீலணை செய்து 5 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருப்பது தமிழகம்தான் இதனை நான் சொன்னால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளமாட்டார். இந்தியா டுடே என்ற ஆங்கில நாளிதல் இந்தியா முழுவதும் சட்ட ஒழுங்கில் சிறப்பான செயல்படும் மாநிலம் என ஆய்வு செய்து முதன்மை மாநிலம் தமிழகம் என விருது வழங்கி உள்ளது.
உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன், இது போக என்ன தகுதி உள்ளது. எனது அனுபவம் தான் அவரது வயது. திமுக ஒரு கம்பெனி. ஸ்டாலின் தான் தலைவர். மீதி இருப்பவர்கள் எல்லாம் நிர்வாக இயக்குநர்கள். வேறு யாரும் வரமுடியாது.
எங்கள் கட்சியில் பலர் இருக்கின்றனர். மக்களோடு மக்களாக இருப்பது அதிமுக கட்சி. விவசாயத்திற்கு வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கிய ஒரே அரசு இந்த அரசு. தடையில்லா மின்சாரம் இருப்பதால் புதிது புதிதாக தொழில் நிறுவனங்கள் வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இரண்டு குழந்தைகளுக்கு முதல்வர் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து களக்காடு சென்ற அவர் மகளிர்குழு பெண்களிடமும் , சேரன்மகாதேவியில் இளம்பெண் இளைஞர் பாசறையினருடன் கலந்துரையாடினார்.