பெரியப்பா கண்ணாடி கலரை மாத்துங்க.. அன்பழகன் சிலையை உன்னிப்பாக கவனித்து சிற்பிகளுக்கு சொன்ன ஸ்டாலின்!
சென்னை : பேராசிரியர் அன்பழகனின் முழு உருவச் சிலை மாதிரியை இன்று பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சிற்பிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். "பெரியப்பா லேசான பிரவுன் கருப்பு கலந்த நிறத்தில் கண்ணாடி அணிந்திருப்பார். அதே நிறத்தில் கண்ணாடியை மாற்றிவிடுங்கள்" என சிற்பிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து, நிறத்தை மாற்றுவதாக சிற்பிகள் தெரிவித்துள்ளார்ர்.
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை நிறுவப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் முழு உருவச் சிலையானது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள சிற்பக் கூடத்தில் தயாராகி வருகிறது. 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தற்போது தயாராகி உள்ளது.
இந்த மாதிரி சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை சிற்பிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா.. 2வது மனைவிக்கும் முக்கியத்துவம் தாங்க! பேத்தி கோரிக்கை!
பேராசிரியர் அன்பழகன்
மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தமிழக கல்வி அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என பெயர் சூட்டி, பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவினை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.
மாடல் ரெடி
சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவுவதற்காக பேராசிரியர் அன்பழகனின் சிலை வடிவமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் உள்ள சிற்பக் கூடத்தில் அன்பழகன் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணியில் முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தயாராகி உள்ளது. சிற்பி தீனதயாளன், சிற்பி கார்த்திகேயன் குழுவினர் இந்த சிலையை தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இந்நிலையில் அன்பழகனின் மாதிரி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்பழகனைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த களிமண் சிலையை உன்னிப்பாக கவனித்து, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை சிற்பிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். பேராசிரியர் அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்த நிலையில் அதன் நிறத்தை பிரவுன் நிறத்தில் மாற்றுமாறு சிற்பிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பெரியப்பா கண்ணாடி கலர்
தான் சிறுவயதில் இருந்து பார்த்துவந்த பேராசிரியர் அன்பழகனின் சிலை மாதிரியை உன்னிப்பாக கவனித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சிலை அமைப்பு, முகத்தோற்றம் ஆகியவற்றில் திருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், மூக்குக் கண்ணாடி இதே நிறத்தில் தான் இருக்குமா என சிற்பி தீனதயாளனிடம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் ஆம் எனக் கூற, பெரியப்பா லேசான பிரவுன் கருப்பு கலந்த நிறத்தில் கண்ணாடி அணிந்திருப்பார். அதே நிறத்தில் கண்ணாடியை மாற்றிவிடுங்கள் என ஆலோசனை கூறியுள்ளார். இதையடுத்து, நிறத்தை மாற்றுவதாக சிற்பிகள் தெரிவித்துள்ளனர்.
ஒப்புதல் பெறப்படும்
சிலையைப் பார்வையிட்ட பலரும் கவனிக்காத விஷயத்தை, அன்பழகனோடு நெருங்கிப் பழகிய முதல்வர் ஸ்டாலின் கவனித்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த சிலை தயாரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் காலம் குறித்தும் சிற்பியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். கண்ணாடி நிறத்தை மாற்றி முதல்வர் ஸ்டாலினின் ஒப்பதல் பெற்ற பின்னர், வெண்கல சிலை வார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும் இந்தச் சிலை தயாரிப்பு பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
550 கிலோ எடை
முதற்கட்ட பணியான களிமண் வார்ப்பு சிலை அமைக்கும் பணி முடிவுற்று ஒப்புதல் பெறப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மெழுகு சிலை, வெண்கலம் வார்ப்பு என ஒவ்வொரு கட்டமாக சிலை முழுமை பெறும் பணிகள் நடைபெறும். இந்தச் சிலை அமைக்கும் பணியில் தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 8.5 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையானது 550 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.