முதல்வர் ஸ்டாலின் செம உத்தரவு.. இனி ரோட்டை "பூசி மெழுக முடியாது.." குவாலிட்டியை உறுதி செய்ய அதிரடி
சென்னை: புதிதாக சாலைப்பணிகள் நடைபெறும் போது மில்லிங் அவசியம் என மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மில்லிங் செய்யாமல் சாலைப்பணிகள் நடைபெறுவதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மில்லிங் என்றால் புதிதாக சாலைப்போடும் போதும் ஏற்கனவே உள்ள பழைய சாலையை முழுமையாக அகழ்ந்தெடுப்பது (பெயர்த்தெடுப்பது)என்று பொருள்.
முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் புதிதாக அமைக்கப்படும் சாலைப்பணிகளை நேற்று முன் தினம் இரவு ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து 'மில்லிங்' செய்யாமல் சாலை போடக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.''
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
''அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்.'' என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதன் மூலம் பழைய சாலைகளை பெயர்த்தெடுக்காமல் எங்கேயாவது புதிதாக சாலை அமைக்கப்பட்டால் அது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்பதை முதலமைச்சர் உணர்த்தியிருக்கிறார்.
இஷ்டத்துக்கு ரோடு
அதிகாரிகளை கரெக்ட் செய்துக் கொண்டு இஷ்டத்துக்கு ரோடு போடலாம் என எண்ணிய ரோடு கான்ட்ராக்டர்கள் பலரும் மில்லிங் விவகாரத்தில் முதலமைச்சர் காட்டும் தீவிர கவனத்தால் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே இருக்கும் பழைய சாலையை பெயர்த்தெடுக்காமல் (மில்லிங் செய்யாமல்) அதன் மேலேயே புதிதாக சாலை அமைப்பதன் மூலம் சாலைமட்டம் உயர்ந்து சாலையோரம் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுவதால் இதில் சமரசமின்றி கடுமை காட்டத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Recommended Video
தலைமைச் செயலாளர்
மில்லிங் தொடர்பாக ஏற்கனவே தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் இருந்து சுற்றறிக்கை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெய்த கனமழையால் பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகள் தற்போது பல மாநகராட்சிகளில் தொடங்கியுள்ளன.