ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல.. போலீஸ் FRSஐ டச்சு பண்ணினாலே போதும்.. கிலியில் குற்றவாளிகள்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் குற்றவாளிகள் சாலையில் நடமாடினால் அவர்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்து கண்டுபிடித்துவிட முடியும். குற்றவாளிகளை எளிதாக பிடித்துவிடலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை (Face Recognition Software) சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (மாநில குற்ற ஆவணக் காப்பகம்) வினித் தேவ் வான்கேடே, இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்,

மென்பொருள்
இந்த மென்பொருள் உருவாக்கத்தால் காவல்துறைக்கு கிடைக்கும் சிறப்பு பலன்கள் என்ன? குற்றவாளிகளை எப்படி அடையாளம் காண்பார்கள். காவல்துறைக்கு இந்த மென்பொருள் எப்படி உதவும் என்பதை இப்போது பார்ப்போம். தற்போது காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முக அடையாளம் கண்டறியும் மென்பொருளின் பெயர் Face Recognition Software என்று இதனை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது சுருக்கமாக FRS என்று அழைக்கப்படுகிறது.

காவல்துறை
இந்த FRS மென்பொருளில் ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் (Crime and Criminal Tracking Network & Systems) CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இதுவரை, 5.30 இலட்சம் புகைப்படங்கள் CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஏராளமான குற்றவாளிகள் படம் இந்த எப்ஆர்எஸ் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

என்ன பலன்
காவலர்களுக்கு இதனால் என்ன பலன்- FRS மென்பொருளை காவல் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கணினியிலும், களப்பணியின்போது FRS செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆப் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய முடியும். இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக உள்ளாரா என்பதை உடனே காட்டிக்கொடுத்துவிடும். அத்துடன் காவல் அலுவலர்கள் இந்த ஆப் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குற்றவாளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தப்பி சென்றாலும் மாட்டிக்கொள்வார்கள்.

சிக்கிவிடுவார்கள்
எப்படி இந்த எப்ஆர்எஸ் ஆப் மூலம் காவல்துறை குற்றவாளிகளை பிடிக்கும். இச்செயலியைப் பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும்போது, குற்றவாளிகள் / சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும்போது, அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் தெரியும்
பொதுவாக சொல்வது என்றால் இந்த FRS செயலியானது, குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்னொரு சிறப்பான விஷயத்தை காவல்துறை எப்ஆர்எஸ் மூலம் வருங்காலத்தில் செய்ய போகிறது... என்னவென்று கேட்குறீர்களா? அதையும் விளக்குகிறேன். வருங்காலங்களில் CCTV வீடியோ பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத்தினை அடையாளம் கண்டறிய ஏதுவாக, FRS செயலியில், வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் இருக்கிறது.

ரயில் நிலையம்
இதன்மூலம், சிசிடிவி கேமராக்களில் சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவர்களோ பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும், கலவரம் அல்லது பெருந்திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத்தினை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களை அனுப்பவும் முடியும். இத்தகைய சிறப்பு மிக்க மென்பொருளைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications