தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம்.. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம் என முதல்வர் ஸ்டாலின், எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு 16 ஆவது சட்டசபை பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதல்வர் என்ற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.

ஊரடங்கு
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்தத் தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டை ரூ 2000 வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தங்குதடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழுமை
நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகம்- பத்திரிகைத் துறையினர் எனப் பல தரப்பினரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.

பொது நல அமைப்பினர்
சமூகநல ஆர்வலர்களும் பொது நல அமைப்பினரும் தொழில் நிறுவனத்தாரும் மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள். 16ஆவது சட்டசபை பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில் வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும் மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

பேரிடர் காலம்
எனவே மாண்புமிகு சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் தொகுதிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்ஸிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டு வர கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications