2 விஷயங்கள்.. விஜயதசமிக்கு கோவில் திறப்பா?.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு.. ஆலோசனை!
முதல்வர் ஸ்டாலின், கோயில்கள் திறக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்
சென்னை: அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது... அத்துடன், விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைகளும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன..
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது என்றாலும், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு
16, 130 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. எனினும், நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. இதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அவை நடைமுறையிலும் உள்ளன. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது..

ஆலோசனை
தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
வரும் 1-ம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.. அதேபோல, பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், கடைகள் திறப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.. குறிப்பாக, கோயில்களை திறக்கவும் இன்றைய தினம் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு கோவில்களை திறப்பதற்கு தடை அமலில் இருக்கிறது..

விஜயதசமி
விஜயதசமி வரும் வெள்ளிக்கிழமை வருகிறது.. அதனால், வெள்ளிகிழமை அக்டோபர் 15-ம்தேதி கோவில்களை திறக்க உத்தரவிடும்படி சென்னை ஹைகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது.. இதனை விசாரித்த நீதிபதிகள், கோவில் திறப்பு குறித்து அரசே முடிவெடுக்கட்டும் என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.. அதனால் இன்றைய கூட்டத்தில் கோவில்கள் திறப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு கூடி வருகிறது.












Click it and Unblock the Notifications