வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பாதுகாப்பு.. தமிழ்நாட்டு பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பிராமிஸ்!
சென்னை: உயர் பதவிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்கள் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பாதுக்காப்புக்கான கட்டமைப்பு ஆகியவற்றை எனது தலைமையிலான அரசு உறுதியாக வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் வெளியே வர வேண்டும். உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்க வேண்டும். பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

பெண்கள் தான் சமூகத்தில் முதுகெலும்பு. மக்கள் தொகை சரி பாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல் எந்த நாடு முன்னேறாது. பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார். சொந்த பெண்களுக்கு பங்கு, காவல்துறையில் பெண்கள் என்று நீண்ட பட்டியலை சொல்ல முடியும்.
2021க்கு பின் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதில் முதன்மையானது கட்டணமில்லா விடியல் பயணம். இந்த திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரிக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர். 1.30 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் பெண்களின் உடல்நலனை காக்கவும் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் உதவி செயலில் தொடங்கப்பட்டுள்ளது. உலக மகளிர் உச்சி மாநாட்டில் தமிழக பெண்களுக்கு நான் உறுதி என்னவென்றால், என் தலைமையிலான அரசு பெண்கள் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பாதுக்காப்புக்கான உறுதியான கட்டமைப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications