சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளை கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது? ஸ்டாலின் கேள்வி
சென்னை: சகோதரர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளை கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய போது, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் பேச்சிற்கான ஆதாரவ்மாக முன்னாள் ராணுவ தளபதி நரவானேவின் புத்தகத்தை மேற்கொள் காட்டினார்.

இதற்கு மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின் ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியது. இதன் காரணமாக நேற்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் முன் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் வரி ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். தொடர்ந்து காகிதங்களை கிழித்தெறிந்து கடும் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டனர்.
இதனால் தமிழக எம்பிக்களான சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலினும் தனது ஆதரவையும், மத்திய அரசுக்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளை கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில், எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், எம்பி-க்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், உடனடியாக 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications