‛29 சி’ பல்லவன் பஸ்.. ஞாபகம் வருதே என பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்து பூரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான் படித்த சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது ‛ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே ' என முதல்வர் ஸ்டாலின் 29 சி, பல்லவன் பஸ் போக்குவரத்தை நினைவு கூர்ந்து பூரித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் படித்தார். 6ம் வகுப்பு முதல் வகுப்பு 11ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் படித்தார்.
இந்த பள்ளியில் படித்த மாணவர்களின் சந்திப்பு இன்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அடித்து அடித்து..
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், எனது தமிழ் ஆசிரியராக இருந்த ஜெயராமன் என்னை வாழ்த்தி பேசியபோது ‛உன்னை மாணவனாக பெற்றதில் பெருமை அடைகிறேன்'' என்றார். அதேபோல், உங்களிடம் தமிழ் பாடம் கற்றதில் நான் பெருமையடைகிறேன். தமிழ் கற்றுகொள்ளக்கூடிய, பயிலக்கூடிய வாய்ப்பை மட்டுமே நீங்கள் தரவில்லை. தமிழ் கற்றுக்கொடுத்தது மட்டுமின்றி அடித்து அடித்து சொல்லி கொடுத்தீர்கள். இது எனக்கு பெருமையாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் நான் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன்.

தூக்கமே வரவில்லை
நிகழ்ச்சிக்கு முதல்வராக நான் வரவில்லை. ஒரு மாணவனாகவும், இங்கு படித்த பழைய நண்பனாகவும் தான் வந்துள்ளேன். இந்த சேத்துப்பட்டு பள்ளி நிகழ்ச்சிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. சதாரணமாக நான் 2 அல்லது 3 மணிக்கு தான் தூங்குவேன். அந்த தூக்கம் கூட சுத்தமாக வரவில்வலை. படித்த பள்ளிக்கு போகப்போகிறோமே என்ற உணர்வோடு நேற்றைய இரவை கழித்தேன்.

யாருக்கும் கிடைக்காத பருவம்
மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலத்தை தான் நாம் மகிழ்ச்சியாக கழித்துள்ளோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படியெல்லாம் துள்ளித்திரிந்தோம் என்பதை நினைத்து நினைத்து பார்த்தேன். பள்ளியில் படித்தபோது தமிழ் ஆசிரியர் ஜெயராமன் கூறியது போல் எனது அப்பா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு அண்ணா மறைவுக்கு பின் தான் முதலமைச்சரானார். எனது தந்தை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த பந்தாவும் இல்லாமல் அமைச்சரின் மகனாக நடந்து கொள்ளவில்லை என ஆசிரியரே கூறினார். அவ்வாறு நடந்து கொள்வதை என் தந்தையும் விரும்பமாட்டார். இது வாத்தியாருக்கே தெரிந்தது போல் என்னுடன் படித்தவர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும்.

29 சி-பல்லவன் பஸ்
இன்னும் சொல்ல வேண்டுமானால் பள்ளி பருவத்தில் நான் கோபாலபுரத்தில் இருந்தேன். இப்போது கூட வீடியோவில் காட்சி வந்தது. பழைய மாணவர்களின் பெயர், அப்பாவின் பெயர் விபரங்கள் வந்தபோது என் பெயர், அப்பாவின் பெயருடன் கோபாலபுரம் முகவரியை குறிப்பிட்டு இருந்தனர். என் தந்தை அமைச்சராக இருந்த வேளையில் கோபாலபுரத்தில் இருந்து நான் பள்ளிக்கு பஸ்சில் தான் வருவேன். சில சமயங்களில் சைக்கிளில் வந்துள்ளேன். வீட்டில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து பல்லவன் போக்குவரத்து 29 சி எனும் பஸ்சை பிடித்து ஏறி ஸ்ட்ரிலிங் ரோட்டில் வந்து இறங்குவேன். ஸ்ட்ரிலிங் ரோட்டில் இருந்து இங்கு நடந்து வர வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 4 கிலோமீட்டர் இருக்கும். அங்கிருந்து நடந்து தான் வருவேன். நடந்து வருவதற்கு பல காரணம் உண்டு. அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது.

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே
செக்யூரிட்டி எல்லாம் ஒப்பு கொண்டிருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு சைக்கிள் அல்லது பஸ்சில் தான் வந்திருப்பேன். ஆனால் செக்யூரிட்டு விடமாட்டார்கள். இருந்தாலும் மகிழ்ச்சியாக பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். மேலும் இங்கு உள்ள முகங்களை, ஆசிரியர்களை பார்க்கும்போது குறிப்பாக ஜெயராமன் ஆசிரியரை பார்க்கும்போது ‛ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே' எனும் பாடல் தான் நியாபகம் வருது. அதனை பாட வேண்டும் என்ற ஆசை வருகிறது.

பெருமையாக உள்ளது
உலகத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கடந்தகால நினைவுகள் தான். கடந்த கால நியாபகங்கள் தான்.எனக்கும் இந்த வளாகம் என்பது எனக்கு மிகமிக மகிழ்ச்சியானது. கட்சி தலைவராக, மாநில முதல்வராக வருவேன் என நான் நினைத்து பார்த்தது இல்லை. நீங்களும் அதனை நினைத்து பார்த்து இருக்கமாட்டீர்கள். ஆனால் அது நடந்துள்ளது. ஆக இப்படி பெரிய அளவுக்கு நான் உயர்ந்து வர இந்த பள்ளியும் ஒரு காரணம் என எண்ணி பெருமைப்படுகிறனே். அதனை மனப்பூர்வாக ஏற்றுக்கொள்கிறேன். ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ டாக்டர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் வந்திருப்பார்கள். ஆனால் முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளது. இது எனக்கும் பெருமையாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications