மருத்துவர் அறையில் தயாளு அம்மாள் கொடுத்த சூப்.. மிசாவை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
மிசாவில் கைது செய்யப்பட்ட போது தாயார் தயாளு அம்மாள் தனக்கு சூப் எடுத்து கொண்டு வந்த சம்பவத்தை முதல்வர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
சென்னை: நான் மிசாவில் இருந்த போது பொது மருத்துவமனையில் மருத்துவர் காமேஸ்வரனின் அறையில் தயாளு அம்மாள் எனக்கு சூப் கொடுத்தார் என பழைய நினைவலைகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழக காது , மூக்கு, தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு திமுக ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டது. மிசா சட்டம் வந்தது. அந்த மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருக்கக் கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது.
பெண்கள் தான் குறியே.. விடாது துரத்தும் தாலிபான்கள்..ஆப்கனில் விழுந்த புதிய தடை.. அடபாவமே! என்னாச்சு?
சிறையில்
ஒரு ஆண்டு சிறையில் இருந்தேன். அப்படி சிறையில் இருந்த போது எனக்கு திடீரென சைனல் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சிகிச்சைக்காக என்னை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துக் கொண்டு செல்வார்கள். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் எனக்கு சிகிச்சை வழங்கப்படும்.
அரசு மருத்துவமனை
இவ்வாறு நான் அரசு மருத்துவமனைக்கு வருவதை எனது தாய் தயாளு அம்மாள் அறிந்து கொண்டு எனக்காக சூப் தயாரிப்பார். பின்னர் அந்த சூப்பை எடுத்துக் கொண்டு எனது தம்பி, தங்கை ஆகியோரை அழைத்து கொண்டு என்னை வந்து பார்ப்பார். அப்போது சில காவலர்கள் என் தாய் என்னை சந்திப்பதற்கு அனுமதிப்பார்கள். ஆனால் சிலர் அனுமதிக்கமாட்டார்கள்.
டூட்டி
அது அவர்களுடைய டூட்டி. அந்த நேரங்களில் சைனஸ் பிரச்சினைக்காக டாக்டர் காமேஸ்வரனை பார்க்க அறைக்கு செல்லும் போது போலீஸாரும் என் கூடவே வருவார்கள். அப்போது டாக்டர் காமேஸ்வரன் நான் பேஷண்டை தனியே பார்க்க வேண்டும். நீங்கள் வெளியே இருங்கள் என போலீஸை வெளியே நிற்க வைத்துவிடுவார் மருத்துவர்.
பர்சனல் ரூம்
அங்கு அவருடைய பர்சனல் ரூம் இருக்கும். அங்கே என் அம்மா இருப்பார்கள். அவர்களை மருத்துவர் காமேஸ்வரன் அழைத்து அம்மா சூப் கொடுங்க என சொல்வார். இதையெல்லாம் நான் நினைத்து பார்க்கிறேன். அப்படிப்பட்டவரின் புதல்வராக இருக்கக் கூடிய மோகன் காமேஸ்வரன் அவரது தந்தை வழியில் நின்று அவரை போலவே இன்னும் சிறப்பாக அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
தமிழால் பெருமை
தமிழ் மாநாடு நடைபெறுவதற்கு தமிழன் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். தமிழை பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் தமிழே என அழைக்கக் கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது. அப்படிப்பட்ட அந்த அழகுத் தமிழ்மொழியில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது. பொதுவாக இது போன்ற மாநாடுகள் எல்லாம் ஆங்கிலத்தின்தான் நடக்கும். அதுவும் கோட் சூட் அணிந்து கொண்டுதான் வருவார்கள். ஆனால் இந்த மாநாட்டில் அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டை நடத்தக் கூடிய மோகன் காமேஸ்வரன் எப்படி இருக்கிறார் என பாருங்கள், வேட்டி சட்டை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.