மெகா சீரியல் போன்ற.. துரோகக் கதைதான் பழனிசாமியின் கதை.. ஸ்டாலின் சொன்ன "திடுக்" பிளாஷ்பேக்
சென்னை: ஒரு மெகா சீரியலின் கதை போன்ற குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான் பழனிசாமியின் கதை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து முதல்வர் ஸ்டாலின் Flashback கதை ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றினார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலை பிரசார மேடையில் எடப்பாடி பழனிசாமியின் Flashback-ஐ பற்றி பேசினார்.

அதில், என்னையும் - உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ! அதேபோன்று, தி.மு.கவையும் - திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. தி.மு.கவுக்கு, திருவண்ணாமலை என்றாலே வெற்றிதான். முதன்முதலாக, தி.மு.க. 1957 தேர்தலில் போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களில் நூற்றாண்டு காணும், ப.உ.சண்முகம் உள்ளிட்ட ஆற்றல்மிகு உறுப்பினர்களைத் தந்த மண் இது! நாடாளுமன்றத்திற்குள் நாம் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, இரண்டு எம்.பி.க்கள் அதில் ஒருவரான, இரா.தர்மலிங்கம் அவர்களைத் தந்த மண் இது! இவர்களை மட்டுமல்ல, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை தொடங்கி... இன்று எதிலும் வல்லவராக விளங்கும் நம்முடைய எ.வ.வேலு உள்ளிட்ட எண்ணற்ற தளகர்த்தர்களைத் தந்துள்ள மண், இந்தத் திருவண்ணாமலை மண்! அதேபோல், தி.மு.க. வளர்ச்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இபிஎஸ், சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதலமைச்சராக முயற்சித்தபோது, ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் என காமெடி செய்தார். சசிகலா சிறைக்கு போனதும் கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து முதலமைச்சரானார் பழனிசாமி.
பிறகு RK நகரில் டிடிவி தினகரனுக்காக பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார். அடுத்ததாக அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.க்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஒரு மெகா சீரியலின் கதை போன்ற குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான் பழனிசாமியின் கதை
'திராவிடம்' என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ - யாருக்கெல்லாம் பிடிக்காதோ - அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல! கலைஞர் பாணியில் சொன்னால் "கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது!" என்பதே எங்கள் எண்ணம்! மொத்தத்தில், மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்.
தமிழ்நாட்டைப்போலவே, டெல்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க - ஜனநாயகச் சக்திகளும் - இந்திய நாட்டு மக்களும் - களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது, நம் தமிழ்நாட்டை மதிக்கும் - நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும் - நம் இனத்தை - இனத்தின் பண்பாட்டை மதிக்கும் - எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications