"நான் அண்ணா, கருணாநிதியின் கொள்கை வாரிசு.. ஆளுநர் உரை வெறும் டிரைலர் தான்".. முதல்வர் ஸ்டாலின் பன்ச்
சென்னை: ஆளுநர் உரை என்பது ஓர் ஆண்டு கொள்கை விளக்கச் சுருக்கம் என்ற முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரை டிரைலர் தான் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
ஆளுநர் உரை குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

நீதிக்கட்சி
சென்னை மாகாணத்தை 1920 முதல் 1937ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் நீதி கட்சி ஆட்சி செய்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார். வடமொழி ஆதிக்கத்தை ஒழித்து, மகளிர் உரிமைகளை வழங்கி, சமூக மாற்றத்திற்கான விதைகளை விதைத்த முதல் கட்சி நீதிக்கட்சிதான் என்றார். வகுப்புவாரி உரிமை, பட்டியலினத்தவர் நலன், கோயில்கள் பாதுகாப்பு என முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்ட நீதிக்கட்சி முதலில் ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகள் கடந்த இந்த நேரத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது பெருமையாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்கை வாரிசு
மேலும், நீதிக்கட்சியின் தொடர்ச்சி தான் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சிதான் இந்த அரசு என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் நலனை திமுகவால் காக்க முடியும் என நம்பி மக்கள் ஆட்சிக்கு அமர்த்தியுள்ளார் என்றார். மேலும், கடந்த 2 நாட்களாக அனைத்து கட்சியினரும் தெரிவித்த கருத்துக்களை ஆலோசனைகளாகவே எடுத்துக் கொள்கிறேன் என்றவர், "நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு" என்றும் தெரிவித்தார்.

வெறும் டிரைலர் தான்
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது என்றவர் ஆளுநர் உரை என்பது அரசுக்கான ஓர் ஆண்டு கொள்கை விளக்கச் சுருக்கம் என்றார். அதாவது, "ஆளுநர் உரை டிரைலர் தான். மீதியை பொறுத்திருத்து பாருங்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

கோயில்கள்
10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைத்துள்ள திமுக, பிரசாரத்தின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றார். தொடர்ந்து சமத்துவபுரம் திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்படும், பழம்பெரும் கோயில்களைப் புனரமைக்க 100 கோடி நிதி ஒதுக்கப்படும் எனப் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார் .சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications