உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்றுகிறேன்! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி தாம் கவலைப்படாமல் பணி ஆற்றிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 54 மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் அந்த விழாவில் பேசியதாவது;

கோபாலபுரம் இல்லம்
கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்களெல்லாம் வந்து போயிருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய இந்தப் பகுதியில் உங்களுடைய திருமணம் நடைபெறுகிறது. இதைவிடப் பெருமை உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. நம்மை ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞருடைய இதயத்தில் இருக்கக்கூடிய உங்கள் அனைவருடைய திருமணம் இங்கு நடந்தேறி இருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள்
உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் என்று சுயமரியாதைப் பெயர்சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். எனக்கு மட்டுமல்ல - என் தங்கை கனிமொழிக்கு மட்டுமல்ல - கலைஞர் பெயர் சூட்டியது, உங்களுக்கும் பெயர் சூட்டியது அவர்தான். அந்த வகையில், எங்களது குடும்ப விழா, நம்முடைய குடும்ப விழா என்ற அந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் கலந்து கொண்டிருக்கிறோம்.

ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சரைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான நான்கு துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, காவல் துறை, சட்டம்-ஒழுங்கு இதுபோன்று சில முக்கியமான துறைகளை மட்டும் தான் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், எல்லா துறைகளையும் கவனிப்பதால், பல நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும், பல வேலைகளுக்கு போக வேண்டும். ஆகவே, எல்லா துறைகளையும் பிரித்து கொடுத்து விடுவார்கள். ஆனால், முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது, மாற்றுத்திறனாளிகள் என்ற ஒரு தனித் துறையை உருவாக்கி, அந்தத் துறையை தன்கீழ் வைத்துக் கொண்டார்.

நெஞ்சுக்கு நெருக்கமான
மாற்றுத் திறனாளிகள் துறையை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார், இது என் நெஞ்சுக்கு நெருக்கமான துறை இந்தத் துறை என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார். நமது ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகர பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம்.

என்னென்ன பணிகள்
UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் 813 கோடியே 63 லட்ச ரூபாயும் - 2022-23 நிதியாண்டில 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

உடல் நலிவு
மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.












Click it and Unblock the Notifications