அதிசயம்.. சென்னையிலேயே இதுதான் ஆழம்.. 115 அடி ஆழத்தில் அமையும் மெட்ரோ ஸ்டேஷன்! எப்போது திறக்கப்படும்
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது மெட்ரோ கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், நகரின் ஆழமான மெட்ரோ நிலையம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு லேன்களில் மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. மெட்ரோவுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாகவே மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மெட்ரோ விரிவாக்க பணிகளிலும் இறங்கியுள்ளது. மொத்தம் 3 ரூட்களில் மெட்ரோ விரிவாக்கம் நடந்து வருகிறது. இதற்காக நகர் முழுக்க கட்டுமான பணிகள் நடந்து வருகிறது
முக்கிய பாலம்: இதற்கிடையே சென்னையின் முக்கிய பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. மெட்ரோ பணிகள் காரணமாகத் திருமயிலை பறக்கும் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலம் இடிக்கப்பட்டு, அங்கே மெட்ரோ சுரங்கப்பாதையை அமைக்க உள்ளனர். இதன் காரணமாக மந்தைவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்ல வேண்டி இருக்கும்.
இருப்பினும், நீண்ட காலம் இந்த சிரமம் இருக்காது.. ஏனென்றால் இடிக்கப்பட்ட பாலத்திற்குப் பதிலாக அருகிலேயே புதிய பாலத்தைக் கட்டி வாகன போக்குவரத்தை அங்கே மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த இடத்தில் தான் அவர்கள் திருமயிலை மெட்ரோ நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளனர்.
ரொம்பவே ஆழம்: திருமயிலை மெட்ரோ நிலையம் என்பது மாதவரம் பால் பண்ணை- சிறுசேரி இடையேயான லேன் 3 மற்றும் பூவிருந்தவல்லி- கலங்கரை விளக்கத்தை இணைக்கும் லேன் 4 என இரண்டையும் இணைக்கும் மெட்ரோ நிலையமாக இருக்கும்.
இந்த மெட்ரோ நிலையம் 114 அடி ஆழத்தில் அதாவது 35 மீட்டர் அடியில் அமைய உள்ளது. இந்தளவுக்கு ஆழத்தில் அமைக்க வேண்டும் என்பதாலும் இது சிக்கலான கட்டமைப்பு என்பதாலும் இந்த மெட்ரோ நிலையம் கடைசியாக அதாவது 2028ஆம் ஆண்டில் தான் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கப் பாதை: மந்தைவெளி மற்றும் திருமயிலை இடையே இரட்டை சுரங்கப்பாதை அமையும் இடத்தில் தான் பக்கிங்காம் கால்வாயின் தூண்கள் உள்ளது. எனவே, சுரங்கப் பாதை பணிகளுக்கு பக்கிங்காம் கால்வாய் தூண்களின் ஒரு பகுதியையும் இடிக்க வேண்டி இருக்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறையிடம் அனுமதி கேட்டுள்ளது
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "சுரங்கப்பாதையை உருவாக்கும் போரிங் மெஷினால் கான்கிரீட்டை மட்டுமே வெட்ட முடியும்.. இரும்பை அதனால் வெட்ட முடியாது. இதனால் அந்தப் பாலத்தின் அஸ்திவார தூண்களை அகற்ற வேண்டி இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார். இந்த பாலம் மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் லஸ் சந்திப்பை இணைக்கும் நிலையில், போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்து போக்குவரத்து போலீசாருடன் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எப்போது பணிகள் முடியும்: இது குறித்து சென்னை மெட்ரோ செய்தித் தொடர்பாளர் எல்.கிரிராஜன் கூறுகையில், "திருமயிலை மெட்ரோ கட்டுமானத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும்.. முதலில் மின் கேபிள்கள், நீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைப்போம். இது செப். மாதம் நடக்கும். நவ. மாதம் மெட்ரோ ஸ்டேஷனின் வெளிப்புறச் சுவர்கள் கட்டும் பணி தொடங்கும்.. 2024 அக்டோபரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.
4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் திருமயிலை நிலையம் லஸ் சந்திப்பின் கீழ் கட்டப்படும். தற்போதுள்ள எம்ஆர்டிஎஸ் நிலையம் மற்றும் லஸ் கார்னரில் உள்ள பேருந்து நிறுத்தத்தை இணைப்பதுடன், கபாலீஸ்வரர் கோயிலையும் இந்த மெட்ரோ நிலையம் இணைக்கும். கட்டுமான ரீதியாகப் பார்க்கும் போது இது ரொம்பவே சவால் தரும் பிராஜக்டாக இருக்கும்.. ஏனெனில் அங்கே அடியில் வலிமையான பாறைகள் இருக்கிறது. அதை நீங்கி மெட்ரோ ஸ்டேஷனை நாம் அமைக்க வேண்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications