கோவை மாணவி தற்கொலை.. மனம் கலங்கிய வைகோ.. கையோடு பெற்றோர்களிடம் வைக்கும் முக்கிய அறிவுரை!
சென்னை: ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியரின் கொடூர செயலால் மனவேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவியை சீரழித்த காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டான். மாணவியும், மாணவியின் பெற்றோர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்ட்டுள்ளாள்.
பொதுமக்களிடையே அதிர்ச்சி
தொடர்ந்து கல்வி நிலையங்களில் இதுபோல் சம்பவம் நடந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகோ வேதனை
இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
முறையான நடவடிக்கை இல்லை
இந்தப் பிரச்சினை, பள்ளி முதல்வரின் கவனத்திற்கு வந்தபோது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்கின்றது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தற்போது இந்தியாவிலேயே ஆகக் கூடுதலாக, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன. அந்த அளவிற்கு அந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது.
போதிய விழிப்புணர்வு இல்லை
என்றாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. பாலியல் கொடுமைகள் நிகழாத வண்ணம், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்; ஆறுதலாக இருக்க வேண்டும். மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அதுகுறித்தும், காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.