அதானி விவகாரம்.. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி சேமிப்புகளுக்கு பாதிப்பா.. வேல்முருகன் வைத்த முக்கிய டிமாண்ட்
எல்.ஐ.சி -எஸ்பிஐ வங்கியில் மக்களின் சேமிப்பை பாதுகாத்திட வேல்முருகன் வேண்டுகோள்.
சென்னை: அதானி குழுமம் மீதான மோசடி உறுதியானால், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ போன்ற பொது நிறுவனங்களில் தனது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும் என வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்.ஐ.சி -எஸ்பிஐ வங்கியில் மக்களின் சேமிப்பை பாதுகாத்திட ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும், மத்திய அரசும்,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
பிபிசி ஆவணப் படம், அதானி :நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்ப முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
அதானி குழுமம்
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அந்தக் குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமம் மோசமான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக இந்திய மதிப்பில், சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க நிறுவனம் திரட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியல்
இதனால் ஒட்டுமொத்தமாக, அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் இரண்டே நாளில் ரூ.4.20 லட்சம் கோடியை இழந்ததோடு, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 7வது இடத்திற்குச் சென்றுள்ளார். அதானி குடும்ப உறுப்பினர்கள் மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற வரி மோசடிக்கு புகழ்பெற்ற நாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்க ஒத்துழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கவுதம் அதானி
கவுதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வர்த்தக இறக்குமதி ஏற்றுமதி திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் குற்றம்சாட்டப்பட்டு 2 முறை கைது செய்யப்பட்டவர். அதானி குழுமத்தின் மோசடியால் பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனம்
ஏனென்றால், எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அதில் 24,000 கோடி ரூபாயை இரண்டு நாட்களில் இழந்துள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது. அதானி குழுமம் பெற்றுள்ள மொத்த கடனில், 81, 200 கோடி ரூபாய், எஸ்.பி.ஐ வங்கியில் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அதானி குழுமம் மீதான மோசடி உறுதியானால், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகிய பொது நிறுவனங்களில் தனது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும்.
மக்களின் சேமிப்பு
அதானி குழுமம் மீதான முறைகேடு புகாரின் காரணமாக, எல்.ஐ.சி, எஸ்.பி.ஐக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும், ஒன்றிய அரசும், இவ்விவகாரத்தை அலட்சியப்படுத்தாமல், நேர்மையான முறையில் விசாரணை நடத்தி மக்களின் சேமிப்பை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.