போச்சே.. ஆரம்பமே சர்ச்சை.. விஜய் பரிசு வழங்கும் விழாவில் டாப் மாணவர்களை தேர்வு செய்ததில் குளறுபடி!?
சென்னை: நடிகர் விஜய், தொகுதி வாரியாக மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களை தேர்வு செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதேபோல், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அண்மையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்கள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் தொடர்ச்சியாக வேலைகளில் இறங்கியுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெறும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் கணக்கெடுக்கப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சுமார் 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார் விஜய்.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களை தேர்வு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்கள் மத்தியில் ஆங்காங்கே புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் தொகுதியில் 492 மற்றும் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்யாமல் 486 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பல்வேறு தொகுதிகளிலும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்திருக்கலாம் என்றும் மாணவர்கள் தரப்பில் சந்தேகம் முன்வைக்கப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர், மாணவர்களை தேர்வு செய்யும்போது ஏற்பட்ட குழப்பங்களால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications